கிளிநொச்சி இயக்கச்சியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளையை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து திருநாவுக்கரசு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நியம் என்றாலும் சரி நிழல் என்றாலும் சரி -ஐயனே
நீயே எங்கள் நாயகன் நீயே எங்கள் குலவிளக்கு
எல்லோருக்கும் அப்பாக்கள் இருப்பதுபோல் - இறைவா
வயதானாலும் எங்கள் அப்பா இன்னும் சிலவருடம்
நம்மோடிருந்தால் என்ன தப்பா!
முள்ளிவாய்காலில் தன்னிரு இளம் மருமக்களை இழந்த
எங்கள் அப்பா வேதனைதான் யாருக்கு புரியும்மப்பா!
இன்னும் சிலகாலம் எங்கள் அப்பா நம்மோடு துணைக்கிருந்தால்
காலனே உனக்கென்ன பாரம்மப்பா!
நியம் என்றாலும் சரி நிழல் என்றாலும் சரி -ஐயனே
நீயே எங்கள் நாயகன் நீயே எங்கள் குலவிளக்கு
எல்லோருக்கும் நல்ல அப்பாக்கள் அமைவது போல் - இறைவா
எங்களுக்கும் எங்கள் அப்பா ஒரு குறையேதும் விட்டதில்லை
அம்மாவின் கண்டிப்பிலும் அப்பாவின் அரவணைப்பிலும்
வளர்ந்த பிள்ளைகள் நாங்கள் - எங்கள் ஐயனே
எங்களுக்காய் அம்மாவுடன் நீ போடும் அன்புச் சண்டைகள்
எங்களுக்காய் அம்மாவிடம் நீ வாங்கும் பேச்சுக்கள்
அத்தனைக்குப்பின்னும் எதுவுமே நடக்காதது போல
அம்மாவோடு சிரித்துப்பேசும் உந்தன் பரிசமும்
சுமங்கலியாகவேதான் நான் இறப்பேன் எங்கள் அப்பா மீண்டுவருவார் என்ற
எங்கள் அம்மாவின் நம்பிக்கையும் இன்று யார் கண்பட்டதோ!
நியம் என்றாலும் சரி நிழல் என்றாலும் சரி -ஐயனே
நீயே எங்கள் நாயகன் நீயே எங்கள் குலவிளக்கு
எங்கள் அப்பா மறைந்து விடவில்லை - எங்கள் அப்பா
எங்கள் நினைவுகளில் இருந்து மறையக்கூடியவரும்மில்லை
நாங்கள் இலங்கையில் உந்தனோடு கூடியிருந்த நாட்களை!
நீண்ட நாட்களின் பின் இந்தியாவில் மகிழ்ந்திருந்த பொழுதுகளை!
எண்ணி மகிழ்ந்த நாங்கள் இன்று ஏங்குகிறோம்
சினமேயறியாத உங்கள் புன்னகை முகத்தோடு
எங்களை பார்த்து சிரித்த கடைசி சிரிப்பு எதுவென?
உரத்தேகதைக்காத உங்கள் உதடுகளால்
நம்மோடு பேசிய கடைசி வார்த்தை எதுவென?
பயமறியா உங்கள் பாசக்கண்களால்
எங்களை கடைசியாக பார்த்த பார்வை எதுவென?
பரிசத்தை தந்த உங்கள் அன்புக்கைகளால்
எங்களை கடைசியாக தொட்ட தொடுதல் எதுவென?
நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் நினைவுகளை மீட்டி பார்க்கிறோம்
நியம் என்றாலும் சரி நிழல் என்றாலும் சரி -ஐயனே
நீயே எங்கள் நாயகன்நீயே எங்கள் குலவிளக்கு
அப்பாக்களின் தியாகங்களும் பாசங்களும் வெளியே தெரிவதில்லை
இந்த உலகத்தின் அத்தனை சிகரங்களைவிட அவை உயர்ந்தவைதான்
இருப்பினும் எங்கள் அப்பா இனியில்லை எல்லாம் முடிந்து விட்டது எனினும்
நீங்கள் இருந்த இருக்கை நீங்கள் தொட்டு வாசித்த புத்தகங்கள் நீங்கள் நடந்து
திரிந்த பாதை நீங்கள் ஓடிய சைக்கிள் நீங்கள் கட்டிய கடிகாரம் நீங்கள் உடுத்த
உடைகள் எல்லாம் அப்படி அப்படியே கிடக்க உங்கள் பயணம் சற்றே நீங்கள்
விழுந்தது கூட தெரியாமல் “பிள்ளை கொஞ்சம் தேத்தண்ணி தாவேன்” என்ற
சொல்லோடு நாம்யாருமே எதிர்பார்க்காதபோது ஏன் நீங்கள் கூட
எதிர்பார்த்திராதபோது இயற்கையாகவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது.
நியம் என்றாலும் சரி நிழல் என்றாலும் சரி -ஐயனே
நீயே எங்கள் நாயகன்நீயே எங்கள் குலவிளக்கு
ஒவ்வொரு மரணமும் ஒரு நல்ல செய்தி சொல்லிப்போகும் -விதி
நம்வசம் இல்லாதவரை நாளை என்பது நமக்கு இல்லாமலும் போகலாம்
இருக்கும்போதே உணருங்கள் உங்கள் பெற்றோரைவிட இந்த உலகில் யாரும்
உன்னதமானவர்களில்லை - இனி யாரும் இருக்கபோவதுமில்லை
ஒரு நாள் அவர்கள் இனியில்லை என்று வருந்துவதைவிட - உணருங்கள்
அவர்கள் உங்கள் கண்முன்னே நியமாக இருக்கும் போதே-உணர்த்துங்கள்
உங்கள் அம்மாவிடம் பாசத்தையும் உங்கள் அப்பாவிடம் நேசத்தையும்
அவர்கள் பெருமைபடும்படி அவர்கள் உங்கள் மீது வைத்த பாசத்தை போல
உங்களால் இயன்றவரை உங்கள் பாசத்தை உணர்த்திக்கொண்டேயிருங்கள்....
“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்”
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட எங்கள் அப்பா சரவணமுத்து திருநாவுக்கரசு அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.