தன் தூய அன்பினால் எம் எல்லாரின் இதயங்களையும் கவர்ந்த தாயை,
இன் முகத்தோடு இனசனங்களை அரவணைத்து வரவேற்று மகிழ்ந்த அரிய தாயை சடுதியாக இழந்து தவிக்கின்ற பொல்லாத பொழுது இது . தன்னைச் சுற்றி இருப்பவர்களை உறவுமுறை சொல்லி வாஞ்சையோடு அழைக்கின்ற அன்னையாரின் அன்புக்குரல் இனி இல்லை என்பது மிகுந்த துயர் தருகிறது .இந்துக் கடலினுள் அலைக்கரம் உயர்த்தித் தாலாட்டிசைக்கின்ற அழகிய தீவாம் நெடுந்தீவிற் பிறந்து, உருத்திரபுரத்தில் சிறப்புற வாழ்ந்து தம் முதிய காலத்தை பிள்ளைகளோடு ஜெர்மனியில் கழித்தவர் அன்னை சரஸ்வதி கந்தையா அவர்கள் . தன் சரஸ்வதியெனும் பெயரிற்கேற்ப மிகச் சிறந்த கல்வியாளராக வேம்படி மகளிர் கல்லூரியில் கல்விபயின்று சக மனிதரிடம் காட்டும் அன்பும் பரிவும் புரிந்துணர்வும்தான் மானிடமேன்மை என்று வாழ்ந்த நல்ல அன்னை . உருத்திரபுர மாதர் சங்கத்தின் முன்னோடியாக நின்று உழைத்தவர். தையல், கைத்தறி நெசவு, பன்னவேலை போன்றவற்றைப் பழகி தான் பழகியவற்றைப் பிறர்க்கும் பயிற்றுவித்து வந்த உன்னதர். இணக்கசபை உறுப்பினராகவிருந்து எல்லோர் மனங்களையும் கவர்ந்தவர். தன் புன்னகையால் எல்லார் உள்ளங்களையும் கவர்ந்த உத்தமி. இறுதியாக வாழ்ந்த ஜெர்மனியிலும் ஆன்மீகப் பணிக்காக தன்னை அர்ப்பணித்து உழைத்தவர். உறவுகளை அன்போடும் வாஞ்சையோடும் அரவணைத்த உன்னதமான அந்த நல்ல தாயை இழந்து தவிக்கின்ற தருணம் இது. அந்த அற்புத அன்னைக்கு
என் ஆத்மார்த்த அஞ்சலி