Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அன்னை மடியில் 07 JUL 1941
ஆண்டவன் அடியில் 02 JUL 2021
அமரர் கனகமலர் தங்கராசா
வயது 79
அமரர் கனகமலர் தங்கராசா 1941 - 2021 Kuala Lumpur, Malaysia Malaysia
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். உடுவிலை வதிவிடமாகவும் கொண்ட கனகமலர் தங்கராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் , நன்றி நவிலலும்.

பிள்ளைகளின் கதறல்

அம்மாவென அழைத்திட
ஆசை பெருகிடுமே
அம்மா இன்று இல்லையென
கண்கள் நிறைகிறேதே
உயிர் தந்து உருவம் தந்து வளமான
வாழ்வுக்கு ஒளி தந்து
கல்வியுடன் நற்பண்புகளை ஊட்டி
வளர்த்த அன்னையே
கொடிமரம் சாய்ந்தது போல் எமை
விட்டு மறைந்தீரோ
மாதம் ஒன்று ஓடி மறைந்திட்டாலும்
மறப்போமா எங்கள் அன்னையே

எங்கள் குடும்ப குத்துவிளக்கே
எங்கள் கருணைக் கடலே
எங்கள் அன்புச் சொரூபியே
எங்கள் குடும்ப மகாலட்சுமியே

உங்களை பிரிந்து தவிக்கின்றோம்
உங்களை மறுபடியும் எப்போ காண்போம்
அம்மா அம்மா என்று கதறுகிறோம்
ஒருமுறை கண்திறந்து பாருங்க அம்மா

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
பிள்ளைகள்

கடைக்குட்டி மகன்
ஜெயாவின் குமுறல்


பத்து திங்கள் எமைச் சுமந்து பெற்றெடுத்த
பத்தினி தெய்வம் நீ அம்மா
பாலூட்டி சீராட்டி பக்குவமாய்
பார் போற்ற வளர்த்த உத்தமி நீ அம்மா

பலநாள் பட்டினி நீ இருந்து
பற்பல அறுசுவை உணவை எமக்களித்தாய்
பதினாறு செல்வங்களும் பெற்று வாழ
பாரினுக்கு அனுப்பி வைத்தாய் அம்மா
பக்கத்திலிருந்து உன்னை பார்த்துக்க முடியாத
பாவி நான் அம்மா

அல்லும் பகலும் அயராது பாடுபட்டு
ஆசை முத்தங்களை எமக்களித்த அம்மா
இன்று நீ இன்றி பரிதவித்து நிக்கின்றேன் நான் அம்மா
ஈகை பல நீ செய்ததை பார்த்தவன் நான் அம்மா

உன் புன்சிரிப்பில் எல்லோரையும் வரவேற்பாய்
ஊக்கமாக பேசி எம் குடும்பத்தை நடத்திய குத்துவிளக்கு
என்ன செய்வதென்று தெரியாமல்
ஏங்கித் தவிக்கின்றோம் உன் பிரிவால் அம்மா

ஐவருக்கு அப்புறம் பிறந்த ஆறாம் மகன் நான் அம்மா
ஒற்றுமையாய் வாழ சொல்லிக் கொடுத்த தெய்வம் நீ அம்மா
ஓங்கி ஒலிக்கும் உன் குரல் தொலைபேசி அழைப்பில்
(எப்படி இருக்குறா ஜெயா? சாப்பிட்டியா?)
இனி எப்போ கேட்பேன் உன் குரல்
அம்மா என்று யாரை நான் அழைப்பேன்

அழுதாலும் புரண்டாலும் ஆறாது உன் துயரம்
போகும் போது கூட ஜெயா ஜெயா
கூப்பிட்ட உன்குரல் இப்போதும் என் காதுகளில்

நீ பட்ட நோய் நொடியிலிருந்து
நீங்கி இறைவனடி சேர்ந்துவிட்டாய்
நீங்காத கவலையுடன் உன் மகன் ஜெயா
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

என் அருமை மாமிக்கு
ஆசை மருமகளின் கண்ணீர் வரிகள்

என்னவனை பெற்று வளர்த்து
எனக்கு மணம்முடித்து தந்த என் அருமை மாமி
எட்டு வருடங்களுக்கு மேல் நம் பாசப் பிணைப்பு
எனக்காக நீங்க எழுதிய அன்பு மடல்
எனக்காக நீங்க தந்த அன்பளிப்பு
என்னிடம் இருக்கிறது உங்கள் நினைவுகளாய்

உங்களுடன் நேரில் பேசிய தருணங்கள் குறைவாயினும்
உங்களுடன் மணிக்கணக்கில் பேசியுள்ளேன் கைபேசியில்
உங்கள் இன்பம், துன்பம், ஆசைகளை பகீர்ந்தீங்க என்னுடன்
உங்களுடன் நிறையநாள் பயணிக்க ஆசை
எங்கள் எல்லோருக்கும் தெய்வம் மாமி

எங்களை புன்சிரிப்புடன் வரவேற்பீர்கள்
எங்களுடன் அன்பாக பேசி மகிழ்வீர்கள்
எனக்கு நிறைய அறிவுரை வழங்கினீர்கள்
எங்களை தவிக்கவிட்டு எங்கே சென்றீர்கள் மாமி?

உங்கள் மடியில் கையில் என் குழந்தை தவழ ஆசைப்பட்டேன்
உத்தமி உங்களை காண குழந்தைக்கு பலன் இல்லையோ? என்னவோ?
உங்கள் மகனை சுமந்தீங்க உங்க கருவறையில்
உங்களை என் கருவறையில் சுமக்க ஆசைபடுகிறேன்

வாங்க மாமி எங்க குழந்தையாக
உங்களை நாம் ஆசைப்பட்ட மாதிரி வளர்த்துக்கிறேன்
உங்கள் நினைவுகள் என் மனதில்
நீங்கா நினைவுகளாய்

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஆசை மருமகள்
சர்மிளா

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

”இந்த உலகில் உண்மையான
பாசத்திற்கு கிடைக்கும் பரிசு
கண்ணீர்த் துளிகள் மட்டுமே!!
உன்னையே தேடும் நம் கண்கள்”

அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 30-07-2021 வெள்ளிக்கிழமை அன்று காலை 07:00 மணியளவில் சாட்டி புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய கிரியைகள் 01-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 02 Jul, 2021