யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Viborg ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சந்திரகுமார் கந்தையா அவர்களின் 16ம் ஆண்டு நினைவஞ்சலி.
வருடம் பதினாறு இது எண்ணிக்கையின் இலக்கமா
இல்லை எம் எண்ணங்களில் உன் நினைவுகளின் ஏக்கமா
கால ஓட்டத்தின் வேகத்தில்
எம்முள் நினைவுகளாய் நின்ற நீ
பல காலம் கழிந்த இவ்வேளையில்
ஏக்கங்களாய் மாறுவதேன்?
மனைவி, பிள்ளைகளின் பாசத்தின் ஏக்கம்
அண்ணா என பரிதவிக்கும் தங்கை அவளின் அன்பின் ஏக்கம்
கண்ணா எங்கே, என் மகனே எங்கே என்று
இன்றும் கதறும் தாய்மையின் ஏக்கம்
எத்தனை ஏக்கங்கள்....
உன் நினைவுகளை சுமக்க முடிந்த நம் இதயத்துக்கு
ஏன் இந்த பிரிவின் ஏக்கங்களை தாங்க முடிவதில்லை
காலம் ஏன் இப்படி வேகம் எடுத்தது?
ஓ! காலன் அவன் தன் பிழையை உணர்ந்தான் போலும்
எம் வேதனைகண்டு துவண்டு
தன் தவறை உணர்ந்து அவனே அவனை நொந்து
எடுத்த ஓட்டத்தின் வேகம் தானோ!
காலத்தின் ஓட்டத்தில் இன்று வருடம் பதினாறு
உன் இழப்பின் காயங்கள் என்றும் ஆறாது.
பலர் சொல்ல கேள்வி கொண்டேன் காலம் மருந்தாகும்
ஏன் அந்த மருந்து நமக்கு பயனின்றி போனதோ
வருடங்கள் பல பறந்தோட நாமும் களைத்து ஓய
சோர்ந்த உள்ளங்களில் உன் நினைவுகள் பேரலையாய் பெருக்கெடுக்க
கண்ணீர் எனும் கடலில் நாம் தத்தளிக்கிறோம்
எம் எண்ணங்களில் வாழ்ந்து எமை வாழவைக்கும் தெய்வமே
உன் பிரிவின் ஏக்கத்தில் தவிக்கும் அம்மா,
மனைவி,பிள்ளைகள்,
தங்கை, உற்றார், உறவினர், நண்பர்கள்...
RIP