

பிரித்தானியா Middlesex ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துவாரகன் தங்கேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று முடிந்தாலும் அன்பு மகனே
ஆழப்பதிந்து விட்ட ஆறாத்துயரமது
அகலவில்லை இன்னும் எம்மைவிட்டு
அம்மாவும் அப்பாவும் ஆற்றொணா வலி தாங்கி
அனலிடைப் புழுவாய் வெந்து துடிக்கின்றோம்
ஆறாத்துயரதனில் அழுது புலம்புகிறோம்
ஆலவிருட்சம்போல் அகன்று விரிகிறது உன் நினைவு
மரதன் மல்யுத்தம் பூப்பந்தாட்டம் என
மகிழ்வுடன் பங்கேற்று பரிசில்கள் பெற்று
உளத்திடமும் உடற்திடமும் கொண்டாயே - உன்
உறுதியினை ஏன் இழந்தாய்
மகிழ்வான வாழ்வதுவும் உனக்கு
மனங்கசந்து போனதுவோ - இம்
மாய உலகைவிட்டு போன அந்நாளில்
மாதாவும் கண்டிருந்தால் அக்கணமே
மாண்டுதான் போயிருப்பாள்
மதி தடுமாறி மயங்கித் துடித்தாரே
பிதாவும் பிரிந்து தான் சென்றிருப்பார்
உடன் பிறந்த சோதரரும்
தனித்திருந்து தவித்திருப்பர்
இறப்பும் பிறப்பும் இயற்கையின் நியதி எனினும்
இளமையின் இழப்பு இதயத்தில் தீய்கிறதே
உனது பிரசன்னம் எமது பிரகாசம்
உனது தரிசனம் எமது மகிழ்வு என
உன்னுடன் வாழ்ந்த பொழுதுகள்
உள்ளத்தில் நிழற்படமாய் தெரிகிறது
உனது நகைச்சுவையும் நயமான பேச்சும்
நினைவில் நின்றாட நெஞ்சம் கனக்கிறதே
நீ எமை விட்டுப் பிரிந்த நாள்முதலாய்
நடைப்பிணமாய் நாம் ஆனோம்
நித்திரையும் இல்லை நிம்மதியும் இல்லை
நினைவலைகள் வந்து வந்து நிரம்பி வழிகிறது
மடை திறந்த வெள்ளம் போல் மனம் நிறைந்து
மனப்படமாய் தொடர்கிறது
மீண்டும் நாம் எப்போ உனைக் காண்போம் என
எம் இதயம் கேட்கிறது
மீண்டு வருவாயோ மகனே நீயும்
எம்மனக்குமுறல் தீர்ப்பாயோ
போகுமிடமெல்லாம் என் செல்வமே - உன்
புன்சிரிப்பு எம்மைக் கொல்லாமல் கொல்கிறதே
பார்த்துப் பார்த்து உம்மை
பாங்காய் வளர்த்து வந்தோம் - உம்
ஏற்றமதை எண்ணி எண்ணி இறுமாந்திருந்தோமே
வெண்ணெய் திரண்டுவர தாழி உடைந்ததுபோல்
விளைந்த பயிரின் விளைச்சலை பார்க்கமுன்னே
காலனவன் தன் கடமை முடிக்க வந்தானே
கதி கலங்கி நிற்கிறோம்
புள்ளி வைத்து போட்டு வைத்த கோலமதை
பூரணமாகுமுன் புயல் வந்து அழித்ததுவோ - உன்
பூமுகத்தைக் காணாது புழுவாய்த் துடிக்கின்றோம் எமைப்
புலம்பவிட்டு எங்குதான் சென்றாயோ ஐயா!
உன் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கும்
என்றும் உன் நினைவுகளுடன் வாழும்
பெற்றோர், சகோதரர், உற்றர், உறவினர், நண்பர்கள்.