யாழ். புங்குடுதீவு 12 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யுனிற், கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பரஞ்சோதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
மனைவியின் மனத்தரற்றல்
கம்பீரமானவரே! கணீர்க்குரலோனே!
கண்ணியம் மிக்க கனவானே! என் நாயகனே
கரம் பிடித்ததும் என் மாபெரும்
கனவாம் ஆசிரியப் பணியில் அமர்த்தி
அழகுசேர்த்து, அம்மா! என்றழைத்து
அன்பைச் சொரிந்து, அர்த்தநாரீசராய்;
அரைப்பாதிதந்தணைத்து ஆதரவு பலதந்தீர்.
அன்னை அப்பனின் கடமைகளை நிறைவு செய்தீர்
ஆசானாய் அதிபராய், அதிபர்க்கு அதிபராய்,
ஆளுமைகள் பலகொண்டிலங்கி கல்வி வளம் சேர்தீர்.
இல்லறச் சோலையிலே நல்லறம் காத்து நின்று
இயல்பாய் இனிதாய் வலம் வந்து
ஈருடல் ஓருயிராய் வாழ்ந்து நின்று
நாம் ஈர்மூன்று செல்வங்களைப் பெற்று; அவர்வழியில்
ஈராறு பேரக்குழந்தைகளைக் கண்டுகளிபுற்றீர்.
உடன்பிறந்தார், உற்ற உறவினர் அனைவரோடு,
ஊரவர் நண்பர்கள் மாற்றினத்தார் யாவரையும் மதித்து
உள்ளன்போடு உறவு முறை கூறும் சொல்வண்ணன்,
என்னையும் ஓர் பொருளாக்கி சமூகப் பணி செய்துவர
ஏணியாய் நின்று தவி உயர்த்தினீர்கள் ஐயா!
ஏங்கித் தவிக்கின்றேன். நீங்கள் இல்லா இவ்வுலகில்
நின்று நிலைப்பேனா? நீயல்லால் தெய்வம் எனக்கேது?
சோதியுள் மங்களமாய் சுடராகி நின்றேனே துடிக்கின்றேன்
துதிக்கின்றேன் உங்களையே எந்நாளும்
பரம்பொருளாய் பரவி நின்று காத்திடுவீர்
உமது உதிரத்துளிகள் அனைவரையும். பரமாகி
பரனொளியில் பரவிநின்று எனக்கும் ஓர் இடம் அளித்திடைய்யா.
ஆத்மசாந்திக்காய் பரமனடி மணிந்தேத்தும்
பாரியார் ப.மங்களாம்பாள், குடும்பத்துடன். ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.