நேபாள நாட்டில் 26-08-2026 புதன்கிழமை அன்று ஏற்பட்ட பயங்கர பனிப்பாறை சரிவு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது.
இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை மற்றும் பாறைச் சரிவினால் ஆறுகளில் திடீரென நீர்மட்டம் அதிகரித்து, வெள்ளம் மற்றும் சேற்றுப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பேரிடரால் நேபாளத்தின் ராசுவா, நுவாகோட் உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகள், பாலங்கள், சாலைகள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பல கிராமங்கள் சேறு மற்றும் இடிபாடுகளால் மூடப்பட்டுள்ளன.
மேலும், நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதால் மீட்புப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஹெலிகாப்டர்கள் மற்றும் மீட்புக் குழுக்கள் மூலம் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த பேரிடரில் நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களில் சுற்றுலாப் பயணிகள், யாத்திரிகர்கள் மற்றும் வெளிநாட்டினரும் அடங்குகின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மேலும், இந்த பேரிடரால் பாதிக்கப்பட்டு, வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவிக்கும் மக்கள் விரைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும், காயமடைந்தவர்கள் விரைவில் பூரண நலம்பெறவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
இத்துயரில் உயிரிழந்த உறவுகளின் குடும்பத்தினருக்கு எமது ஐ.பி.சி, தமிழ்வின், லங்காசிறி, RIPBOOK இணையத்தளங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன் அவர்களின் துயரிலும் கண்ணீர் சிந்தி பங்கெடுத்துக்கொள்கிறோம். மேலும் காயமடைந்து பாதிக்கப்பட்ட மக்கள் விரைந்து நலம்பெற வேண்டுகின்றோம்.